எழுந்து, வீழ்ந்து...
மீண்டும் எழும் நான்
ஒர் பெரும் கடல்.
அழகான விசித்திரம்
என் உலகம்.
நட்பு பாராட்டும் திமிங்கலங்களும் உண்டு,
ஆளை விழுங்கும் அகழிகளும் உண்டு.
என் மனவெழுச்சியின் பெரும் அலைகள்
உங்கள் பயந்த பார்வையில் கலவரம் சேர்க்கக்கூடும்
கால் நனைத்து விளையாடும் சிறு அலைகளோ...
சில்லென்ற என் நேசம் சொல்லும்.
உங்கள் கற்பனை கப்பல்கள் பயணிக்க... உடல் கீறியும் வழி தருவேன்.
மிரளவைக்கும் சோகங்களையும் சுமைகளையும்...
மூழ்கடித்து முகிழ்த்தெழுவேன்.
அணைத்து முத்தமிட நீளும்
என் அலைக் கரங்களை,
யூதாசின் முத்தங்கள் என
பூமிக்கு அறிமுகம் செய்யாதீர்.
அன்பின் ஆழம் பார்க்காமல்,
அழிவெனப் பழிக்காதீர்.
கண்டங்களைக் கடந்து விரியும்
பிரமாண்டம் நான் - உம்
புழக்கடை கிணற்றில் அடங்கி
புழுங்கிச் சாவேன் என்று காத்திருக்காதீர்
எத்தனை முறை வீழ்ந்தாலும்
மீண்டும், மீண்டு எழுவேன்.
பீனிக்ஸ் பறவையாய் சிறகு விரிப்பேன்;
அறிவுக் கண் கொண்டு அண்டம் அளப்பேன்.
யுகந்தோறும் பெண்ணாய் உயிர்ப்பேன்;
மானுடம் மலர அன்பால் உய்விப்பேன்.
கிணற்றுத் தவளைகளே விடைகொடுங்கள்;
கடலாய் பரவிப் பெருக வழிவிடுங்கள்.